சுத்தமான சுதந்திரம்..
1947ம் ஆண்டு வாங்கிய சுதந்திரம், கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் கடந்து விட்டது, பல உயிர்கள் பல சதைகள் சிதைக்கப்பட்டு கிடைத்த சுதந்திரம், ஒரு நாள் கொடி ஏற்றிவிட்டு அந்த கொடி கிழிந்தாலும் மாற்றமால் கடந்து செல்லும் சுதந்திரம், அது பிறந்தநாள் அல்ல, ஒருநாள் மரியாதை செலுத்துவிட்டு கடப்பதற்கு, அதனுடன் வாழ்கிறோம்.
இந்த சுதந்திரம் யாருக்கு சொந்தம், எந்த சுதந்திரத்தை நாம் சுவாசிக்கிறோம் என்பதை காணுவோம்
விடுமுறை அளித்து தொலைக்காட்சியில் இரண்டு புதிய படங்கள் இட்டால் அது அல்லவா சுதந்திரம். மாய உலகத்தில் வாழ்கிறோம்., மறந்துவிடாதீர்கள்.
தந்திரகாரர்களின் இடம் இருந்து சுதந்திரம் வாங்கி வஞ்சகர்களிடம் விற்றுக் கொண்டிருக்கிறோம்.
அனிதா முதல் ஸ்ரீமதி வரை ஏதோ ஒன்று விதைத்து விட்டுதான் சென்றிருக்கிறார்கள், சுட சுட மனதை ஈர்க்கும் செய்திகள் வந்தால் அதை படித்து கோபப்பட்டு அன்றோடு மறப்போம், இதுதான் நாம் கற்றுக்கொண்டுள்ள சுதந்திரம்.
உக்ரைன் ரஷ்யா போர், பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டு பணவீக்கம் ஏற்பட்டு, ஆனாலும் நாம் உழைப்பை நிறுத்தவில்லை, ஏன் போராடவில்லை ?. ஏன் என்றால் நமக்கு தேவைகள் தேங்கி கிடக்கிறது.
பள்ளிக்கு செல்ல வேண்டிய பிள்ளைகள், பள்ளிக்கு செல்லாமல் பட்டாசு தொழிற்சாலைகளிலும், பண்டங்கள் தயாரிக்கும் பன்னாட்டு தொழிற்சாலைகளிலும் வேலை செய்கிறார்கள், அவர்களுக்கு தேவை சுதந்திரம்.
கோடிகளில் புரளும் சினிமாக்காரர்களுக்காக சண்டைகள் போட்டு வீட்டில் பெற்றோரை பட்டினி போடுகிறார்களே, அந்த பெற்றோருக்கு வேண்டும் சுதந்திரம்.
நீதி தேவதையின் சேலை அகற்றி பார்க்கும் மானங்கெட்ட காமர்கள் மத்தியில் வாழும் பெண்களுக்கு வேண்டும் சுதந்திரம்.
இரவை நினைத்து பயப்படும் பெண்களுக்கு வேண்டும் சுதந்திரம்.
கடத்தப்பட்டு விற்கப்பட்டு விபாச்சாரத்தில் தள்ளப்படும் குழந்தைகளுக்கு வேண்டும் சுதந்திரம்..
பிச்சை பாத்திரம் ஏந்தி வீதி வீதியாக ஒரு வேளை சோற்றுக்கு அலையும் குழந்தைகளுக்கு வேண்டும் சுதந்திரம்.
பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆசிரமத்தில் வாழும் அநாதை பெற்றோர்களுக்கு வேண்டும் சுதந்திரம்.
இன்னும் எவ்வளவோ சுதந்திர தேவைகள் முடங்கி கிடக்கிறது. அனைத்தும் நம்மால் சரி செய்ய முடியுமா? இன்று இருக்கும் காலகட்டத்தில் கஷ்டம்தான்.
ஆனால் ஒன்று செய்ய முடியும். ஒரு பெற்றோரை காப்பாற்ற முடியும், ஒரு குழந்தையின் பள்ளி செலவை ஏற்கமுடியும். ஒருவர் ஒருவரை ஏதோ ஒரு விதத்தில் காப்பாற்ற நினைத்தாலே அவர்கள் அதிலிருந்து விடுப்பட்டாலே அதும் சுதந்திரம்தானே.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு குழந்தையை காப்பாற்றினாலே போதுமே. முழு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றாலும் மனதில் ஒரு சாந்தம் வருமல்லவா, அந்த சாந்தம்தான் நம் சுதந்திரம்.
அனைவரும் ஒன்று கூடுங்கள், வீதியில் இறங்கி போராடுங்கள், உதைப்படுங்கள், சிறைப்படுங்கள். இது அல்ல என் கூற்று, உங்களால் முடிந்தால் ஒரு ஏழையின் வயிற்றுக்கு ஒருவேளை உணவிடுங்கள். அவரின் அந்த ஒரு வேளை பசிக்கஷ்டத்தை போக்கிய நீங்களும் ஒரு சுதந்திரவாதிதான்..
புத்திக்கு எட்ட தாமதம் ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு பெண் பிள்ளையின் படிப்பின் செலவை நான் ஏற்றுள்ளேன். தாமதம்தான் ஆனால் ஒருவருக்கு படிப்பை கொடுக்கிறது என்று மனம் சுதந்திரமாக சுழல்கிறது..