What's new

ஒருநாள் கிரிக்கெட்-இரட்டைச் சதம்

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக இரட்டைச் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியே முதலிடத்தில் உள்ளது.

ஒருகாலத்தில் ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடிப்பது என்பது எல்லா கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கும் பெரிய கனவாகவே இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து இரட்டைச் சதம், முச்சதம் அடித்தவர்கள்கூட ஒருநாள் போட்டியில் சதமடிக்க முடியாமல் தோல்வியுற்றார்கள். ஆனால், இன்று டி20 போட்டிகளில்கூட இரட்டைச் சதம் அடிப்பது சர்வசாதாரணமாகி வருகிறது. ஆனால் பல ஆண்டுகளாக, ஒருநாள் கிரிக்கெட்டில் தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ரன்னாக, 1997ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அன்வர் எடுத்த 194 ரன்களே சாதனையாக இருந்துவந்தது.
அதை முறியடித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதத்தை பதிவு செய்தவர் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிவேகமாக 149 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் தொடங்கிவைத்த நேரம், இன்று பலரும் இரட்டைச் சதத்துக்கு சாதனையாளர்களாக மாறி வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய தொடக்க வீரரான சுப்மன் கில், 149 பந்துகளில் 19 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் உதவியுடன் 208 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் பல சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார். மிகக் குறைந்த வயதில் இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரரானார். அவர் 23 வயது 132 நாட்களில் இந்த சாதனையைச் செய்துள்ளார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இசான் கிஷன் 24 வயது 145 நாட்களில் இச்சாதனையைச் செய்திருந்தார். அவர் 210 ரன்கள் எடுத்திருந்தார்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இரட்டைச் சதம் அடித்த பட்டியலில் இந்திய வீரர்களே முதலிடத்தில் உள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் (200 ரன்கள்),

வீரேந்திர சேவாக் (219 ரன்கள்),

ரோகித் சர்மா (264, 209, 208 ரன்கள்),

இஷான் கிஷன் (210 ரன்கள்),

சுப்மான் கில் (208 ரன்கள்) ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர். இதில் இன்றைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மூன்று இரட்டைச் சதம் அடித்துள்ளார். அதிலும் 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அவர் அடித்த 264 ரன்களே, இன்றுவரை அதிகபட்ச சாதனையாக இருக்கிறது.

இதற்கு முன் அவர் 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 208 ரன்களையும், 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்களையும் எடுத்துள்ளார். இவரைத் தொடர்ந்து முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு 219 ரன்கள் எடுத்திருந்தார்.
ரோகித் சர்மாவுக்கு அடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்தைச் சேர்ந்த எம்.ஜே.குப்தில் மேற்கிந்திய அணிக்கு எதிராக 2015இல் 237 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் சேவாக் இருக்க (219 ரன்கள்), 4வது இடத்தில் மேற்கிந்திய வீரர் கெய்ல் உள்ளார். அவர், ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2015ஆம் ஆண்டு 215 ரன்கள் எடுத்தார். இரட்டைச் சதம் அடித்த பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபாகர் ஜமான், 2018ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக 210 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆக, ஒருநாள் போட்டிகளில் இதுவரை 10 வீரர்கள் இரட்டைச் சதம் அடித்துள்ளனர். அதில் இந்திய வீரர்கள் ஏழு முறையும், பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்திய தீவு அணிகளைக் கொண்ட வீரர்கள் தலா ஒரு முறையும் இரட்டைச் சதம் அடித்துள்ளனர்.
image

இந்த இரட்டைச் சதங்கள் பட்டியலில் இலங்கை, மேற்கிந்திய தீவு, ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிராக தலா இரண்டு முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சாதனை தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக ஒருமுறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
 
Top