மாலையிடும் சொந்தம்
அத்தியாயம் - 4
பாட்டியம்மா வந்ததிலிருந்து சஞ்சனாவிற்கு ஏதோ ஒரு நிறைவு...
அழகான ஒற்றைக் காப்பு பரிசாக வாங்கி வந்திருந்தார். உருண்டையான தங்க காப்பில், சில வண்ணக் கற்கள் நடுவில் பதிக்கப்பட்டிருந்தன. கம்மல் திருகாணி போன்று ஒரு அமைப்பு. திருகி அணிய வேண்டும் . மிகவும் பிடித்திருந்தது அந்த நவீன வடிவ காப்பு.
கையில் அணிவித்து அழகு பார்த்தார். காலில் விழுந்து வணங்கிக் கொண்டாள்.
வார இறுதியில் அக்கா அத்தானுடன் கடைவீதி சென்றாள். அவளிடம் கேக்காமலேயே வாங்கிக் குவித்தனர்.
'பெங்களூரில் பெண்கள் நவநாகரீகமாக இருப்பாங்க சஞ்சனா. சல்வார் , பைஜாமா மட்டும் போடாதே. நாம தனியா கடைக்கு மறுபடியும் போலாம் இன்னும் சில உடைகள் வாங்க..அத்தான விட்டுட்டு . அமேஸான் ல கூட போட்டுக்கலாம்..'
'சரி.., பழகிக்கறேன்...'
அவன் பெங்களூரில் வசித்து வந்தான்.
அதன் பின்னர் வந்த ஓர் நாளில் குல தெய்வம் கோயிலுக்குச் சென்று வந்தார்கள் . அத்தையம்மாவும் மாமாவும் கூட கோயிலுக்கு வந்திருந்தார்கள்.
அத்தை மகன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தான். கல்யாணத்திற்கு எப்படியும் வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தான். சஞ்சனாவின் தோழன் அவன்.
குலதெய்வத்திடம் மனமுருக வேண்டினாள்.
அவனிடமிருந்து புலன செய்திகள் அதிகம் வரவில்லை. மறுபடியும் வெளியூர் சென்றிருந்தான்.
'மும்பையில் லெகங்கா வாங்கிடவா சஞ்சனா. புகைப்படம் அனுப்பறேன். பாத்துட்டு சொல்லு... அனுப்பிடறேன் வாங்கி..'
ஒரு ஆரஞ்சும் பொன்னிறமும் கலந்த வேலைப்பாடமைந்த உடையை தேர்ந்தெடுத்தாள்.
அவனுக்கு அளவு கேட்டு இவளே தேர்வு செய்த நீல வண்ண ஷெர்வாணி ஆர்டர் செய்திருந்தாள்.
திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. சொல்ல இயலாத ஓர் உணர்வு.. பயமோ பரவசமோ ஏதோ ஒன்று மனதில்.
முக புத்தகத்தில் அவனிடமிருந்து நட்பழைப்பு. உறுதி செய்வதற்கு முன் சில புகைப்படங்களை, பதிவுகளை தனக்கு மட்டும் தெரியும்படி மாற்றினாள். கள்ளத்தனம் வந்தது இப்போதே.
அவனின் பக்கத்தை அன்று முழுக்க ஆராய்ந்ததில் நாள் ஓடிவிட்டது இரவு தூக்கத்தையும் தூக்கிக் கொண்டு.
புகைப்படங்கள் அதிகமில்லை.. ரசித்துப் பார்த்த சில இடங்கள். சஞ்சனா போல சுயமிகள் (selfie) இல்லை . அரிதாக சில பதிவுகள். அறிவியல் , தொழில் நுட்பம், சமூகம் சார்ந்தவை.
குறுந்தாடியில் அழகாக கம்பீரமாக இருந்தான்... திரும்பத் திரும்ப அந்த சில பதிவுகள்,புகைப்படங்களை பார்த்தாள்.
வழக்கமாக வாங்கும் நகைக்கடையில் சில புதிய அணிகலன்களும், பழைய நகைகள் சிலவற்றை உருக்கி மாற்றியும் செய்யச் சொல்லியிருந்தார்கள்.
வருங்கால நாத்தனார் அழைத்திருந்தார். கோயம்புத்தூரில் நடைபெறும் வரவேற்பிற்கு ஒப்பனை அலங்காரம் எப்படி செய்யலாமென கேட்டு.
'உங்க விருப்பம் எப்படி அக்கா??
'உனக்கு எப்படி பிடிக்கும்...? ' நீளமான முடி உனக்கு.. அதற்கு ஏற்றாற் போல செய்யலாம் ...'
அழகுக் கலை நிபுணரிடம் பேச வைத்தார்.
அன்றிரவு அவன் பேச்சு வாக்கில் சொன்னான்.
'சிலருக்கு ஒப்பனை தேவையில்லை சஞ்சனா..., மெலிதான அலங்காரம் போதும் உனக்கு...'
கவனித்திருக்கறான் போல். மனதில் பதித்துக் கொண்டாள்
சஞ்சனாவின் ஊர் வழக்கப்படி மாப்பிள்ளை ஊரில்தான் கல்யாண முகூர்த்தம் நடக்கும். பெண்ணின் ஊரில் வரவேற்பு நடக்கும்.
அவனின் தந்தை கேட்டுக் கொண்டதால் மாப்பிள்ளை ஊர் வழக்கப்படி வைத்துக் கொண்டார்கள்..
கும்பகோணத்தில் மண்டபத்தில் திருமணம். அந்த வார இறுதியில் ஞாயிற்றுக் கிழமையில் கோயம்புத்தூரில் மாலையில் வரவேற்பு என ஏற்பாடாகியிருந்தது.
சித்தி சித்தப்பா , வாண்டுகள், அத்தையம்மா மாமா என நெருங்கிய உறவுகள் எல்லாருமே வந்து விட்டனர். வீட்டில் சமையல் வாசனை , பேச்சு சிரிப்பு சத்தம், அலங்காரமென ஒரே அமர்க்களம்.. அக்கா தான் அதிகம் அலைந்து கொண்டிருந்தாள்..., அத்தானையும் உட்கார விடாமல்..
அவ்வப்போது அத்தை மகன் பேசினான் வீடியோ அழைப்பில்..
'மெகந்தி போடறப்போ அங்க இருப்பேன் அம்மு...'
'ம்ம்..'
'உன் ஆத்துக்காரர் என்ன சொல்றார்??'
'அவர் பணியில் நேரமில்லாமல் இருக்கிறார்...அதிகம் பேச முடியல...'
'அப்டியா!!.. '
'அம்மு அறையில் இரவில் லைட் எரியுதாமே.. தூங்கறதில்லனு கேள்விப்பட்டேன்...'
'அவங்க அப்படி பேச மாட்டாங்க...'
'இப்போவே அந்த பக்கம் சாஞ்சிட்டியா...என்ன ஒரு சப்போர்ட்!! ம்ம் நடத்து.. '
'நீனு அடி வாங்கப் போற..'
சத்தமாக சிரித்தான்..
ரெண்டு நாளில் கல்யாணம்.
இரவு பத்து மணி இருக்கும். அவன் வீடியோ அழைப்பு விடுத்திருந்தான். அவசரமாக தலை முடியை சரி செய்து கொண்டாள்.. அழைப்பை ஏற்றாகி விட்டது.
'சஞ்சனா ..'
'சொல்லுங்க... எப்படி இருக்கீங்க ..'
'பாத்தா எப்டி இருக்கேன்? '
'மாப்பிள்ளை மாதிரி"
'ஹா ஹா ...மாப்பிள்ளைதான் இப்போ..'
சிரித்தாள்..
'அழகா இருக்கே சஞ்சு. கொஞ்சம் ஃபோன முகத்தை விட்டு தூரமா தள்ளிப் புடி... '
சஞ்சனா சஞ்சுவாக சுருங்கியிருந்தது ..
இரவு உடையில் சங்கோஜமாக இருந்தது..
'என்ன சாப்ட...??
'நாள் எப்படி..??'
'எல்லாரும் என்ன செய்றாங்க...??'
பேசிக் கொண்டே போனதில் கடிகாரம் நள்ளிரவு 12 மணியைக் காட்டியது .
'சரி தூங்கு... கல்யாணப் பொண்ணுக்கு கருவளையம் வந்துடப் போகுது...'
'நீங்க ..?'
'எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு... அரை மணி நேரம் ஆகும்..'
'மாப்பிள்ளைக்கு வராதா கருவளையம்.... ??'
'ஹ ஹா..என்னை யாரு பாக்க போறாங்க.. பொண்ணு மேல தான் பார்வை இருக்கும்.. வராது... தூங்கு...'
'ம்ம்...'
'நல் இரவு..'
' இனிய கனவுகள் ....'
தொடரும்....
வெண்ணிலா