காதல் காதல் காதல், காதல் போயிற் சாதல் சாதல் சாதல். ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே காதல் செய்வீர். காதலர் தின நல்வாழ்த்துக்கள்
View attachment 1333View attachment 1334
"The Moore has also died" (மூரும் கூட இறந்து போய்விட்டார்) என்று ஏங்கெல்ஸ் தன்னைச் சுற்றியிருந்த நண்பர்களைப் பார்த்துச் சொன்னார்.
கார்ல் மார்க்ஸின் காதல் மனைவி ஜென்னி மார்க்ஸ் இறந்துவிட்டார். ஜென்னி மார்க்ஸின் உடலம் வைக்கப்பட்டிருந்த அறைக்குப் பக்கத்து அறையில் கார்ல் மார்க்ஸ் உயிரோடுதான் இருந்தார். ஆனால் அவரும் இறந்து போனதாக நண்பர்களிடம் ஏங்கெல்ஸ் சொன்ன வார்த்தைகள்தான் முதலில் குறிப்பிடப்பட்டவை. மார்க்ஸின் குடும்ப வட்டத்துக்குள் மூர் என்ற பட்டப் பெயரால்தான் அந்த உலக மகா மேதை அழைக்கப்பட்டார்.
மார்க்ஸ் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டார் என்று ஏங்கெல்ஸ் சொன்ன வார்த்தைகளுக்குப் பின்னால் மார்க்ஸுக்கும் ஜென்னிக்கும் இடையிலான அற்புதமான காதல் உறவு ஒளிந்திருக்கிறது. மார்க்ஸுக்கும் ஏங்கெல்ஸுக்கும் இடையிலான அற்புதமான நட்புறவைக் காவிய நட்பு என்று மாமேதை லெனின் போற்றுவார். அதற்கு இணையாக மார்க்ஸுக்கும் ஜென்னிக்கும் இடையில் முகிழ்த்திருந்த காதலும் காவியக் காதல் என்றே சொல்லலாம். உண்மையைச் சொன்னால், ஜென்னி மறைந்த மறு ஆண்டில் மார்க்ஸும் மண்ணில் இருந்து மறைந்தார். ஏங்கெல்ஸின் வார்த்தைகளில் இருந்த தீர்க்க தரிசனம்!
ஏழெட்டு ஆண்டுக் காலக் காதலுக்குப் பின்தான் கார்ல் மார்க்ஸின் கரங்களை ஜென்னி மார்க்ஸ் பற்றிப் பிடித்தார். காதலர்களின் காதல், கல்யாணத்திற்குப் பிறகு எப்படி இருக்கிறது என்பது நாமெல்லாம் அறிந்த ரகசியம் தான். ஆனால் மார்க்ஸ் ஜென்னியைப் பொறுத்த அளவில் அவர்களின் காதல் அவர்களின் காலம் முழுவதும் நீடித்து நின்ற நிலையான ஒரு பேறாகும்.
பிரபுக் குலத்தில் பிறந்தவர் ஜென்னி. மார்க்ஸ் என்னவாகப் போகிறார் என்பதற்கு முன்னரே இருவருக்கும் இடையில் காதல் முகிழ்த்தது. காலமெல்லாம் கம்யூனிசத் தத்துவத்துக்காகவே மார்க்ஸ் வாழத் தொடங்கியபோது அந்த வாழ்க்கை ஒரு பெரிய போராளியின் வாழ்க்கையாக அமைந்து விட்டது. போராட்டத்தோடு கூடவே வறுமையும் அந்த வாழ்க்கையின் வெகுமதியாக ஆகி விட்டது. அத்தனைத் துன்பங்களையும் துயரங்களையும் நெஞ்சில் தாங்கிக் கொண்டு ஜென்னி மார்க்ஸுக்கு ஒரு உற்ற உயிர்த் தோழியாய் வாழ்ந்த வாழ்க்கை, கல் நெஞ்சங்களையும் கரைத்து விடும். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த காதல் மட்டும் எந்தக் காலத்திலும் மாற்றுக் குறையாத பத்தரை மாற்றுத் தங்கமாகவே இருந்தது. ஏனெனில் ஜென்னி, கார்ல் மார்க்ஸை மட்டுமல்லாமல், கார்ல் மார்க்ஸின் கம்யூனிசத்தையும் சேர்த்தே காதலித்தவர்; இணைந்தே வாழ்ந்தவர்.
கார்ல் மார்க்ஸுக்கும் ஜென்னிக்கும் இடையிலான காதல் அன்பை அறிந்திட வேண்டுமெனில், அவர்களுக்கு இடையில் நிகழ்ந்த கடிதப் போக்குவரத்துகளை ஒரு புரட்டு புரட்டிப் பார்த்தாலே போதும். எடுத்துக்காட்டாக ஒரு கடிதம். மார்க்ஸிடம் இருந்து வந்த கடிதத்துக்கு ஜென்னி எழுதிய பதில் கடிதம் (1844) இதோ:
"நம்ப மாட்டீர்கள் நீங்கள்
என் இதயத்தின் பேரன்பே!
உங்கள் கடிதங்களைக் கொண்டு
எத்தனை மகிழ்ச்சி வெள்ளத்தில்
என்னை நீங்கள் ஆழ்த்தி விடுகிறீர்கள்!
என் இதயத்தின் போதகரே!
மேட்டிமை ராஜாவே!
உங்களின் சென்ற நல்லாயர் கடிதம்
உங்கள் ஏழை ஆட்டுக்குட்டியின் நெஞ்சிலே
ஆறுதல் அமைதியையும் சாந்தி சமாதானத்தையும்
எவ்வாறு கொண்டு வந்து சேர்த்தன தெரியுமா?
View attachment 1335