- Joined
- May 27, 2023
- Messages
- 3,746
- Points
- 133
யாதும் ஆகிறாய்
"முகத்தை மறைத்த..
அகத்தை நிறைத்த..
வித்தைக்காரி அவள்...."
அர்த்த ராத்திரியில் ஆரவாரம் இல்லை.
அமானுஷ்யமாய் ஓர் அமைதி.
திறந்திருந்த சாளரத்தின் அசைந்த திரைச்சீலைகளின் வழியே, வளியை அனுபவித்தவாறே கணிணியின் விசைப்பலகையில் வரிகளை
தட்டிக் கொண்டிருந்தான்.
"யாரவள்??
யட்சினியா..
யாதுமானவளா ...
யாருமில்லையா...
அழகிய யுவதியா...
யாதும் அறியேனாய்
யான்...."
அவளின் பெயரோ ஊரோ முகமோ முகவரியோ தெரியாமல் அவளைப் பற்றியே சமீப காலமாய் எழுதும் ஒரு எழுத்தாளனாய் அவன்...
இந்த அரிதாரம் மெய்நிகர் உலகிற்க்கானது. சமூக வலைதளங்களில் கூட அதே அரிதாரம். அவனின் அடையாளம், அறியப்படாத ஒரு இரகசியம்...
பின்பற்றுபவர்கள் ஏராளம். எழுத்தின் விசிறிகள். சமூக கட்டுரைகள் முதல் பல சுவாரஸ்யமான தலைப்புகளில் அவனின் பக்கங்கள் நிறைந்திருக்கும். காதல் வயப்பட்டவனா எனத் தோன்றுமளவு தற்போதைய சில கவிதைகள்...
யாராக இருக்கும் அவனின் அவள்??அவனுக்கே தெரியவில்லையோ!!!!
அவள் :
மழைத்தூறலின் சாரல் அவ்வப்போது சிலிர்க்க வைத்தது முகத்தை, பேருந்தின் சாளர வழியே...மனதை மயக்கி
ஒலித்துக் கொண்டிருந்த பேருந்தின்
மெல்லிசைப்பாடலை முனுமுனுத்தபடியே முகத்தைத் துடைத்துக் கொண்டாள்....
மழையில் நடுங்கி ஒடுங்கி
ஒருவழியாய் வந்தவளை வரவேற்றது வீட்டில் நிறைந்திருந்த மிளகாய் பஜ்ஜியின் மணம்....
அவசரம் அவசரமாக ஆயத்தமாகி
பஜ்ஜியை கூட அதிகம் ரசித்து
ருசிக்காமல், தேனீரையும் மடக்கில் பருகிவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள். மடிக்கணியை திறந்து பார்க்க அவ்வளவு ஆவல்..
அலைபேசி அணைந்து விட்டிருந்தபடியால் பொறுமை காற்றில் பறந்துவிட்டிருந்தது....
கண்கள் இதழோடு இணைந்து
குறும்புடன் மலர்ந்தன அவனின் அன்றைய அவளுக்கான கவிதையில்... பரவசத்தில் ஒருமுறை படுத்து உருண்டுவிட்டு கைகள் பரபரக்க அவளும் மடிக்கணிணியில் தட்டினாள்....
"யாதும் அறியானின்
அரியணையில்...
யாதுமானவளா....
யாருமில்லையா..."
எசப்பாட்டு போல கவிதையில் பதிலை அவளின் பக்கத்தில் பதிவிட்டாள்.
இதுவும் அரிதாரம் தரித்த அடையாளம் அறிய முடியாத அவளின் சமூக வலைதள பக்கம்தான்....
இருவருக்கும் பல பரஸ்பர நட்புகள் இணைப்பில்.. பின்பற்றுபவர்களும் அதிகம்...
ஒருவருக்கொருவர் அறியப்படாதவர்களின்...
மற்றவர்களால் அறியப்பட்ட
காதலோ????
அறிந்து கொள்வோம்....
வெண்ணிலா...