Day 5 Task - Agnii
Hi Secret Santa and
@Aadhini @Wanderer
"Enaku Pidithha Vishayam, pidikkaamal ponaal"
எல்லோருமே நம் வாழ்க்கையில் பல்வேறுபட்ட விஷயங்களை எதிர்கொள்கிறோம். பல்வேறுவிதமான இயல்புகளை உடைய மனிதருடன் பழகுகிறோம்.
இன்று அதிபிடித்தமான ஒன்று, நாளையும் பிடித்தே ஆகவேண்டும் என்று, இயற்கையில் எந்த கட்டாய விதியும் இல்லை.
நம் வாழ்வின் ஓட்டம் மகிழ்வை நோக்கியே அமைந்துள்ளது.
நமக்கு நாமே விதிக்கும் பெரும் தண்டனை தான் பிடிக்காத ஒன்றை செய்வது என்று நான் நம்புகிறேன்.
நம் நிபந்தனைக்குட்பட்ட மனம் (conditioned mind) மிக பிடித்த ஒன்று பிடிக்காமல் மாறும் போது, முரண்பட்டு நம்மை சிறிது திணறடிக்கும். முடிவுகள் எடுப்பதை முறியடிக்கும்.
எனது 25 வயது வரை,
Prawns சாப்பிடுவது எனக்கு மிக பிடிக்கும். ஆனால் ஒரு சமயத்தில ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட பொழுது, அலர்ஜி ஏற்பட்டு, வாந்தியால் மிக அவதிப்பட்டேன். கண்கள் எல்லாம் இருட்டடைந்து குடலே புரட்டி வெளிய வருகிறார் போல் வாந்தி . அதன் பிறகு, கடந்த சில ஆண்டுகளாக Prawns வாசம் வந்தாலே அந்த உணவைவிட்டு தள்ளி நிற்பேன். சில வருடங்களுக்கு பிறகு, சரி! முயன்று தான் பாப்போம் என்று சாப்பிட எத்தனிக்கும் போது, என் நினைவில் பதிவாகி இருக்கும் ஒவ்வாமை தடுத்துவிட்டது.
இதே போல மிதிவண்டி வேகமாய் மிதிப்பதில் அலாதி விருப்பமுள்ளவன் நான். ஆனால் சில நாட்களுக்கு பிறகு அதில் இருந்த ஈடுபாடு காணாமல் போய்விட்டது.ஒரு சலிப்பு தன்மை ஒட்டிக்கொண்டது. இப்போது மிதிவண்டி சீண்டுவார் இல்லாமல் என்னை பார்த்து முழிக்கிறது வீட்டில்.
இதே சூழ்நிலை என் வேலையில் வந்தபோது ஊதியம் குறைந்த போதும் என் பணி இடத்தை மாற்றி கொண்டு இருக்கிறேன்.
பிடிக்காத ஒரு விஷயத்தில் ஈடுபடுவது நமக்கு நாமே செலுத்தி கொள்ளும்(கொல்லும் ) slow பாய்சன். சிறிது சிறிதாக மனச் சோர்வடைய செய்து நம்மை முழுவதுமாய் குலைத்துவிடும். அவ்விஷங்களை விட்டு சட்டென்று விலகுவது நல்லது.
நட்புகள் உறவுகளுடனாக சில நிகழ்வுகள் பிடிக்காது, பிடித்த சிலரை விலகியதும் உண்டு.
அதற்காக நான் அவர்களின் மேல் வெறுப்பை வளர்த்து கொண்டதும் இல்லை. அவர்கள் தரப்பு நியாயம், சூழ்நிலை, சந்தர்ப்பம் முதலியவற்றை ஆராய்ந்து ( putting myself in their shoes) என்னை சமன் செய்ய முயன்றுள்ளேன். ஆனால்
பிடிக்காதவர்களிடம் பழகுவது வேடம் இடுவது போல். நேர்மையில்லாத நாடகம் எதற்கு?
அதே சமயம் என் மனதிற்கு மிக மிக நெருக்கம் மிகுந்தவர்கள் புரிதலின்றி என்னையும் காயப்படுத்தி தன்னையும் வருத்தி கொள்கிறார்கள் என்று உணரும் தருணத்தில், சில நாட்கள் அல்லது மாதங்கள் கூட நான் பேசாமல் மௌனித்ததும் உண்டு. இது இருவருக்கும் சுய ஆலோசனை செய்யும் வாய்ப்பை அளித்துள்ளது. மீண்டும் பேசும் போது புரிதல் பெருகி இருப்பதை கண்டு வியந்தும் இருக்கிறேன்.
மிக பிடித்தது பிடிக்காமல் போகும் நிலையில் என் மனம் சோர்வடையும், ஏன்? எதற்கு? எதனால்? என்று கேள்விகள் துளையிடும். இருப்பினும் பிடிக்காததை விட்டு விலகுவது நமக்கு நாமே வழங்கும் சுய அன்பின் பரிசு என்பதை உணர்ந்தவன் நான். அதன் மூலம் ஒரு சுதந்திர உணர்வு இயல்பாய் என்னுள் விளைய கண்டிருக்கிறேன்.
மாற்றம் ஒன்றே மாறாதது.
பிரபஞ்சத்தின் போக்கும் இதுவே. எனக்குள் உள்ள ஒவ்வொரு அணுவும் மாறிகொன்டே இருக்கும் நிதர்சனத்தில் ஆழ்ந்ததில், மிக பிடித்தது பிடிக்காமல் போவதும் இவ்வாழ்வில் இயல்பான ஒரு நிகழ்வே!!!
நன்றி