நல்லது. சோதிடத்தில் நம்பிக்கை உண்டா உங்களுக்கு?
நம்புதல் என்னும் தொழில் அபாயமானது. ஒரு விஷயத்தைப் பற்றி ஏதும் தெரியவில்லை என்றால் அதனை குறித்த பல்வேறு யூகங்கள் அவரவர் மனதில் தோன்றும். அவைகளிலே ஒன்றை பிடித்திருக்கிறது என்றால் அதை இறுகப்பற்றி அதுவே சரியென நம்பத்தொடங்கி விடுவது
இதற்கு ஒரு சிறந்த உதாரணம் கடவுள் நிலையைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்றால் உள்ளதை சொல்லி தெரியாது என்று துவங்கலாம். அதை விடுத்து தானே ஆராய்ந்து பாராமல் - அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்க என்று ஒரு கோட்பாட்டை / ஒரு வாதத்தை பற்றி அதுவே சரியென்று குருட்டுத்தனமாக கடவுள் உண்டென்றோ இல்லை என்றோ நம்பத்தொடங்கி விடுவது.
இதே போல பேய், சோதிடம், வேற்றுக்கிரக உயிர்கள் என்பது போன்ற அமானுஷ்ய விஷயங்களில் ஏதோ ஒரு குழுவின் வாதத்தை பற்றி அதனை அப்படியே ஏற்றுக்கொள்வது. அறிவால் அனுபவத்தால் உறுதி செய்யாமல் தான் நம்பியதே சரியென அடம் பிடிப்பது. (அடுத்தவரையும் ப்ராண்டுவது.)
ஆனால் அறிதல் என்பது நம்புதல் என்னும் தொழிலுக்கு நேரெதிரானது. எங்கே அறிதல் இருக்கிறதோ அங்கே நம்பிக்கைக்கு வேலை இல்லை. யாரும் சூரியனை நம்புகிறதில்லை. எல்லோரும் பார்க்கிறோம். அங்கே நம்பிட ஒன்றுமில்லை. எங்கே நம்பிக்கை இருக்கிறதோ அங்கே அறிவு வேலை செய்யவே செய்யாது. தாமல்லத அன்னியரை கொலை செய்தால் சுவனத்தில் அனுபோகத்திற்கென்று 72 பேரழகுப் பதுமைகள் ஒவ்வொரு போராளிக்கு இறைவன் அளிப்பார் என்ற கூற்றை அவ்வண்ணமே நம்பி ஏற்று செயல்படுபவரே இதற்கு சான்று. நிற்க.
சோதிடம் என்பது உண்டு இல்லை என்று ஒற்றை சொல்லில் சொல்லத்தக்க பதில் ஆகாது. ஆமென்றும் இல்லை என்றும் கலந்து சொல்ல வேண்டியிருக்கும். இதற்க்கு அடிப்படை சித்தாந்தத்தில் நிறுவப்பட்ட அனுபவத்திலும் நாம் மனிதர்களிடையே காணுகின்ற வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள். நியதி என்பது அவரவர் செய்யும் செயலுக்கு ஏற்ற விளைவு அவரவரையே சென்று சேரும் என்பது. (இதனாலேயே கயவர்கள் இத்தகைய அறம் நீதி நியதி போன்ற விஷயங்களை முழுமூச்சுடன் வெறுப்பார்கள்) அந்த நியதியின் படி, ஏற்கனவே செய்த வினைக்கு தகுந்த
விளைவை தவிர்க்க இயலாது. நிகழ்ந்தே தீரும். இதனை கணித்திடலாம்.
ஆனால் அதற்கு எதிர் வினையாற்றிட ஒவ்வொரு உயிருக்கும் தற்சுதந்திரம் எப்போதும் அளிக்கப்ட்டுள்ளதால் புதிதாக பதியும் செயல்களின் விளைவுகள் அவ்வவவ்வுயிர்களின் கையில். அதனை கணிக்க இயலாது. ஏனென்றால் எப்படி எதிர்கொள்வார்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்களோ அதற்கு தக்கவாறு விளைவு மாற வேண்டும். இது இயற்கை.
இதுவே திருக்குறளில் கூட முரண்பாடு போல் சொல்வார்கள் பழுதறக் கற்க்காதவர்கள். "ஊழிற் பெருவலி யாவுள?" என்று தீர்ப்பெழுதியவர் "ஊழையும் உப்பக்கம் காண்பர்" என்றும் எழுதியிருக்கிறார். இதில் எது சரி என்று குழம்பினால் இரண்டுமே சரி. முந்தையது பழவினையின் விளைவு. நிகழ்ந்தே தீரும். தற்சுதந்திரத்தால் புதிய வினை பற்றியது பிந்தையது.
சாத்திரங்கள் அனைத்தையும் கற்றுணர்ந்த பாரதியார் தமது புதிய ஆத்சூடியில் இப்படி கட்டளைகள் பிறப்பிக்கிறார். அச்சம் தவிர் என்று தொடங்கி. "
வானநூல் தேர்ச்சி கொள்" என்பது ஒரு கட்டளை. "
சோதிடம் தனை இகழ்" என்பது இன்னொரு கட்டளை. இன்னும் ஒரு படி மேலே போய் அவர் இடிப்பது எதிமறை எண்ணம் கொண்ட பக்தி இல்லாத நாத்திகர்கள் தான் சோதிடம் பார்ப்பார்கள் என்றும் சாடுகிறார்.
சூழமாய உலகினிற் காணுறுந் தோற்றம் யாவயும் மானத மாகுமால்
ஆழுநெஞ்சகத் தாசையின் றுள்ளதேல் அதனுடைப் பொருள் நாளை விளைந்திடும்
தாழுளத்தினர் சோர்வினர் ஆடுபோல் தாவித்தாவிப் பலப்பொருள் நாடுவோர்
வீழுமோ ரிடையூற்றினுக் கஞ்சுவோர் விரும்பும் யாவும் பெறாரிவர் தாமன்றே!
விதியை நோவர் தம்நண்பரைத் தூற்றுவர் வெகுளிபொங்கிப் பகைவரை நிந்திப்பர்
சதிகள் செய்வர் பொய்ச்சாத்திரம் பேசுவர்*
சாதகங்கள் புரட்டுவர் பொய்மைசேர்
மதியினிற் புலை நாத்திகங் கூறுவர்*மாய்ந்திடாத நிறைந்த விருப்பமே
கதிகள் யாவும் தருமென லோர்ந்திடார் கண்ணிலாதவர் போலத் திகைப்பர் காண்.
அதனால் கோள்களால் நட்சத்திரக்கூட்டங்களால் மனிதர் வாழ்வில் பாதிப்பு உண்டா? உண்டு..
அதற்கென்று எதற்கெடுத்தாலும் சோதிடத்தை பார்த்துக்கொண்டே இருக்கக் கூடாது. அது விளங்காது. நிம்மதி போய்விடும். இன்னும் சொல்லப்போனால் பார்க்கவே கூடாது. அல்லது தேவையில்லை.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது
வகுத்த படி வரட்டும். வாழ்ந்து தான் ஆக வேண்டும். வாழ்ந்துட்டு போறது தானே?
அதெதுக்கு படத்த போடுறதுக்கு முன்னால கதையை கேட்டுக்கிட்டுண்ணேன்?
தோன்றி யழிவது வாழ்க்கை - இதிற்
துன்பத்தோ டின்பம் வெறுமையின் றோதும்
மூன்றில் எதுவருமேனும் - களி
மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி.