நான் போட்ட பூமாலை
மணம் - 6
கார் பயணத்தில், கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருந்த மாதவனை, ஓட்டுநரின் குரல் நிகழ்காலத்துக்கு அழைத்திருந்தது...
'தம்பி.....'
'இங்க விட்டா கொஞ்சம் தூரத்திற்கு சாப்பிட வேற நல்ல உணவகம் கிடைக்காது..சாப்டுட்டு போய்டலாமா ' எனக் கேட்டிருந்தார்.
காலைச் சிற்றுண்டிக்கு பிறகு எதுவுமே அருந்தியிருக்கவில்லை.
உடன் பயணித்தவளுக்கும் பசித்திருக்க வேண்டும். மதிய உணவு வேளையைத் தாண்டியிருந்த நேரம். உணவருந்தினார்கள்..
அவள் கேட்டாள்.. ' ஹோட்டல் ரூம் புக் பன்னியாச்சா மேடி.., இல்ல போய்தான் பாத்துக்கனுமா...'
'நேத்தே பன்னிட்டேன் '
ஒரே வரியில் பதிலளித்தான்..
உணவு காலியாகி இருந்தது அவள் தட்டில்.. பாவம் பசியில் இருந்திருப்பாள் போல..
இவனுக்குத் தான் உணவு இறங்க மறுத்தது. பேருக்கு சாப்பிட்டான்.. கவனித்துக் கொண்டிருந்த அவள் கேட்டாள்,
'ஆர் யூ ஓகே??'
'ம்ம்'
மேலும் கீழுமாக தலையாட்டினான்.. அதற்கு மேல் அவளும் வாய் திறக்கவில்லை..
பயணம் தொடர்ந்தது..
விடுபட இயலாத நினைவுகள் மீண்டும் ஆக்கிரமித்தன விடுவேனா என்று...
விடிந்தால் கல்யாணம்...
வாழ்வில் மறக்க இயலாத முக்கியமான நாள்கள் என்றால், பிறந்த நாள், வேலையில் சேர்ந்த நாள், திருமண நாள்..
இதில் மூன்றாவது முக்கிய நாள் நாளை.. மாதவனின் நண்பன் இவனிடம் கதை பேசிக் கொண்டிருந்தான்.. அப்படியே தூங்கியும் விட்டான்..
இவனுக்கு பல வேறுபட்ட கலவையாண உணர்வுகள். பரவசம், பயம், ஆவல் என சிலவற்றை சொல்லலாம் வெளிப்படையாகவே. .
இன்றாவது அவளிடம் பேசி விடலாமா. திருமணத்திற்கு முன் பேசவில்லை என்பதை மாற்றி விடலாமா, என எண்ணினான்.
வழக்கம் போல செய்தி தான் அனுப்பினான். ஆனால் குரலில் ..
'ஹலோ ..தூங்கியாச்சா? ' - இவன்
'ஹலோ...இன்னும் இல்லை.. நீங்க? '
- அவள்
'தூக்கம் இன்னும் வரலை' - இவன்
' காலைல 3 மணிக்கே அழகு நிலையத்திலிருந்து வருவாங்க. கொஞ்சம் தூங்கினா தான் முடியும்., நீங்க தூங்கலையா..சீக்கிரம் தூங்குங்க..'
- நீண்டதாக அவள் குரலில் செய்தி
'தூங்கறேன்.. குட் நைட்' - இவன்
'குட் நைட்' - அவள்.
அசந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம்..ஏதேதோ சத்தங்கள்..அவள் சொன்ன 3 மணி ஆகியிருக்குமோ..கண்ணைத் திறக்காமல் யோசித்தான்..
மாப்பிள்ளை அறைக் கதவு தட்டப்பட்டது..
நம்மதான் இந்த ஒப்பனை சிகை அலங்காரம் எல்லாம் வேண்டாம்னு சொன்னமே ... இன்னும் கொஞ்சம் தூங்கிருக்கலாம் என நினைத்துக் கொண்டே , கதவைத் திறந்தான்..நண்பன் அசரவில்லை அப்டி ஒரு தூக்கம்..
மாதவனின் அண்ணன் தான் கதவை தட்டியிருந்தான்.
'இந்த நேரத்தில் நீ ஏன் முழிச்சிட்டு !! ..' - மாதவன்
'மாதவா ஏதாவது குடிக்கிறியா..'
இப்போது அருமை நண்பன் வாய் திறந்து பேசினான்..
'காஃபி சொல்லிடுங்க அண்ணா...'
'தயாராகிட்டு வாங்க ..'
'இப்போவே தயாராகனுமா..??'
'ஆமா..மணி 4 ஆகுது...'
நண்பனுடன் வெளியில் வருவதற்குள், மொத்த குடும்பமும் மாப்பிள்ளை அறைக்குள் வந்திருந்தனர். இன்னும்
தயாராகாமல் இவங்கெல்லாம் இங்க என்ன செய்யப் போறாங்க என யோசித்தான்...
'பொண்ண காணலையாம்...'
தலைக்குள் ஏதோ ஆகியது போல ஓர் உணர்வு மாப்பிள்ளைக்கு..
'எனக்குப் புரியல'.
தெளிவு வேண்டி மறுபடியும் கேட்டான்..
அம்மா கண்கலங்கியபடியே பேசினார்.. 'காலைல இருந்தே காணோமாம்..'
'காணோம்னா ??'
அவளின் எண்ணுக்கு அழைத்துப் பார்த்தான். அணைத்து வைக்கப்பட்டிருந்தது..
'தேடலாம்., அவங்களுக்கு என்னாச்சு தெரியலையே.. போலிஸ்ல சொல்லிடலாமா ??' மாதவனின் நண்பன் தான் கேட்டான்
'அதற்கு அவசியமில்லை . அவங்க வீட்டில, அவளாகத்தான் போயிருக்கனும்னு சொல்லிட்டாங்க..'
யாரோ சொன்னார்கள் இதை.
'விடிய ஆரம்பித்து விட்டது. எல்லாரும் வந்துருவாங்க.. என்ன செய்றது தெரியலை..'
'என்ன இப்போ வந்து இப்படி சொல்றாங்க..என்ன அநியாயமா இருக்கு', நண்பன் தான் ஆதங்கத்தோடு, ஆத்திரப்பட்டான்.
மாதவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. துடைக்கப்பட்டிருந்தது ..
'வருபவர்களிடம் கல்யாணம் நின்னுடுச்சு சொல்லிக்கலாம்'
திருமணத்திற்கு வந்திருந்த
உறவுக்கார பெண்களில் யாரையாவது செய்து வைக்கலாம் என்ற சில பெரியவர்களின் கருத்துகளை, பிடிவாதமாக மறுத்து விட்டான் மாதவன்.
பெண்ணின் குடும்பத்தினர் பரிதாபமாக நின்றனர்.
கல்யாண மண்டபம் வந்து, கல்யாணம் நின்னா, எவ்வளவு பெரிய அவமானம்..
'மாப்பிள்ளை பிடிக்காம அந்த பொண்ணு தப்பிச்சு போயிருச்சு..'
'அவளுக்கு முன்பே ஒரு காதல் இருந்ததாம். அவனுடன் விடியறதுக்குள்ள ஓடிவிட்டாளாம்...'
'என்ன நெஞ்சழுத்தம்
இந்த பொண்ணுக்கு..சொல்லி நிறுத்தியிருக்கலாம். இப்படியா எல்லாரையும் சேர்த்து அவமானப்படுத்துவது.'
'நல்ல வேளை. கல்யாணம் செய்யல இன்னும்., தலைக்கு வந்தது, தலைப்பாகையோட போயிருச்சு...'
இதெல்லாம் கடந்து தான் வீடு வந்து சேர்ந்தனர்.
இறுக்கமான அந்த படைப்பு மேலும் கடினமானது...
சில மாதங்களில் அலுவலக மாற்றம் செய்து கொண்டான்.. புதிய மனிதர்களுக்கு இவன் கதையும் தெரியாது, இரக்கப் பார்வையும் இல்லை.. நிம்மதியாக உணர்ந்தான்..
ஒரு வருடத்தில் வெளிநாட்டில் பணிபுரிய நிர்வாகம் கேட்டதை ஒப்புக் கொண்டு கிளம்பியும் விட்டான், மாறுதல் தேவையென. பெற்றோர் தான் தவித்தனர்.
ஒரு வருடம் ..வராமலேயே இருந்து விட்டான்..
அவளை நினைத்ததுண்டு பலமுறை.. தான்தான் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமோ.. பேசக்கூட இல்லையே.. என்னிடம் சொல்லியிருந்தால் நிறுத்தியிருக்கலாமே..
எங்கே என்ன செய்கிறாளோ
இது வரையில் தகவல் இல்லை. அல்லது தகவல்இவனுக்கு மறைக்கப்பட்டிருக்கலாம்.
விடுமுறைக்கு ஒரு மாத காலம் இப்போது தான் வந்திருந்தான்.
கார், கோவையின் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அடைந்திருந்தது.. ஊருக்கு வந்துவிட்டிருந்தார்கள்..
மணக்கும்...