ஐந்து கரிச்சான்கள் - முந்தைய சிறுகதையைப் படிக்க
சிறுகதை - 4
ஆலத்தின் ஆழம் (பாகம் - 1)
அது ஒரு அழகிய அடர்ந்த நந்தவனம். பசுமையின் உறைவிடமாக, பலவகையான பழமரங்கள், செடிகள், கொடிகள், பலவண்ணங்களில் மலர்ந்து மணந்திருந்த மலர்கள், படர்ந்து விரிந்திருந்த புல்லினங்கள், பறந்து திரிந்திருந்த புள்ளினங்கள் மற்றும் பலவகையான விலங்கினங்கள் என அவ்வளவு உயிரோட்டமாக, பார்ப்பதற்கே இரம்மியமாக காட்சியளித்தது அந்த நந்தவனம்..!
அந்த நந்தவனத்தின் மையப்பகுதியில், பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து, பல நூறு கிளைகளை விரித்து, எண்ணற்ற விழுதுகளால் வேரூன்றி கலையாகவும், கம்பீரமாகவும் இருந்தது ஒரு ஆலமரம். அந்த ஆலமரத்தை மட்டுமே உறைவிடமாகக் கொண்டிருந்தன கோடிக்கணக்கான உயிர்கள். அந்த உயிர்களுக்கு, தினம் ஒரு கதை சொல்லுவதை வழக்கமாக வைத்திருந்தது அந்த ஆலமரம். அவ்வாறாக அன்று, தான் பசுந்தளிராக இருந்தபோது, உறக்கத்தில் கண்ட அருங்கனவை கதையாக விவரித்தது. (இனி ஆலமரம் கதையை விவரிப்பது போல தொடரும்)..!
பக்க கிளைகள் விடாமல், பச்சிளந்தளிராக நான் இருந்த போது, நித்திரையில் உதித்தது ஒரு அற்புதக் கனவு. அந்த கனவில், நான் பெரிதாக வளர்ந்திருந்தேன். என் கிளைகளில் நிறைய ஆலம்பழங்கள் பழுத்திருந்தன. கனிந்திருந்த என் பழங்களின் மணத்தை, தென்றல் காற்று சுமந்து சென்று, நந்தவனம் எங்கும் நிரப்பியது. அவ்வாறாக, எங்கோ ஒரு ஓரத்தில் இருந்த குரங்கின் நாசியிலும், என் பழங்களின் மணம் நுழைய, அந்த குரங்கு விரைந்து என் கிளையை அடைந்தது..!
எனது மனம் படபடத்த அந்த நொடியில், சற்றும் தாமதிக்காத குரங்கு, வெடுக்கென்று என் பழங்களைப் பறித்து சுவைத்தது. நான் கஷ்டப்பட்டு விளைத்த என் பழங்களை, இப்படி என் அனுமதிகூட இல்லாமல் தின்று விட்டாயே, என்று எரிச்சலுடன் குரங்கை விரட்டுவதாக எண்ணி, என் கிளைகளை அசைத்தேன்..! உண்மையில் என் நித்திரையில் இருந்து விழித்தேன், கிளைகளை அசைப்பதாக எண்ணி, முளைத்திருந்த இரண்டு இலைகள் அசைந்ததால்..!
என்னுடைய பழங்கள், என்னுடைய கிளைகள் என்ற சுயநலமான எண்ணங்கள் என்றும் சுகம் தராது என்று அன்று உணர்ந்தேன். மாறாய், மனம் நிறைய வலிகளை பரிசளிக்கும் என்பதையும் நன்கு உணர்ந்தேன். எனவே, சுயநலமான எண்ணம் எதிலும் வேண்டாம் நண்பர்களே..!
- தொடரும்..!
இச்சிறுகதையின் கருப்பொருள், ஒரு செடியுடனான உரையாடலாக, ஒரு சிறுகவிதைப்பொறியில் தோன்றியது..! இதோ அந்த சிறுகவிதை,
ஒரு செடியின் கனவு
உறங்கும் செடியினில், கனவொன்று முளைத்தது..!
முளைத்ததில் செடியது, மரமென வளர்ந்தது..!
வளர்ந்ததும் மரத்தினில், பழமொன்று பழுத்தது..!
பழுத்ததில் மணமது, காற்றினில் நிறைந்தது..!
நிறைந்ததில் விலங்கொன்று, மரத்தினை அடைந்தது..!
அடைந்ததும் விலங்கது, பழத்தினைப் பறித்தது..!
பறித்தும் மரமது, மனம் வெந்து நொந்தது..!
நொந்ததில் மரமது, கிளையினை அசைத்தது..!
அசைத்ததில் செடியின் கனவு கலைந்தது..!
கலைந்ததும் செடியினில், புது எண்ணம் பிறந்தது..!
சுயநலம் சுகந்தராதென்பது அது..!
மழையினில் நனைந்த செடியின்
இலைகளை நான் வருடியபோது,
தான் சொல்ல மறந்த கதையை,
தன்னை மறந்து என்னிடம் சொன்ன செடி..!
நன்றிகளுடன்,
அகமகிழன்