- Joined
- May 27, 2023
- Messages
- 3,746
- Points
- 133
கட்டுரை: 'கணினிகள் இருந்ததில்லை என்றால் '
கட்டுரை
கணினிகள் இருந்ததில்லை என்றால்
முன்னுரை:
உலகமே கணினிமயமாகி விட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கலியுகம் என்பதை விட கணினியுகம் என்பதே பொருந்தும்.
முதன் முதலில் சார்லஸ் பேபேஜ் என்பவரால் முதல் கணினி உருவாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
காலத்திற்கு ஏற்றபடி வெவ்வேறு அறிஞர்களால் பல முன்னேற்றங்களை படிநிலைகளை கடந்து வந்து விட்டது
அத்தனையும். தட்டச்சு பலகை இணைக்கப்படாத காலகட்டத்தில் தொடங்கி மடிக்கணினி
முதற்கொண்டு பல மாற்றுருவங்களும் அதி நவீன வசதிகளும் பெற்று அத்தனையும் எளிமைப்படுத்தப்பட்டு விட்டன.
இனணயத்தில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளோரை தொடர்பு கொள்கிறோம்.
கணினி இல்லாத காலத்திலும் சங்க காலம் தொட்டு படைக்கப்பட்டவையும்
கண்டுபிடிக்கப்பட்டவையும் அதிகம்தான்.
கணினிகள் இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
கல்வி:
பாடங்களை தெளிவாகக் கற்று ஏட்டில் மட்டுமே எழுதியிருந்திருப்போம்.. புத்தகங்களில், தெளிவுரைகளில் ஆசிரியர்களிடம் மட்டுமே அறிந்து கொண்டிருப்போம்.
வகுப்பில் திரைகளில் இயங்குபட காணொளியாய் பாடங்கள் புகட்டப்பட்டிருக்காது
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கணினி, தொழில்நுட்பம் சார்ந்த பாடங்கள் இடம்பெற்று இருந்திருக்காது.
மொழிகளும் கணிதமும் அறிவியலும் சமூக அறிவியலும் பொருளியலும் கற்கப்பட்டிருக்கும்.
கல்லூரிகளில் கலையும் அறிவியலும் தொழிற்கல்வியும், கட்டிடக் கலையும் இயந்திரவியலும், உழவும் முக்கிய பாடங்களாய் இருந்திருக்கும்.
தட்டெழுத்தும் சுருக்கெழுத்தும் கட்டாயத் தகுதியாய் அமைந்திருக்கும்.
தட்டெழுத்துப் பயிலகங்களின் தேவையும் தேடலும் அதிகம் இருந்திருக்கும்.
அலுவலகங்கள்:
அரசாங்க தனியார் அலுவலகங்களில், காகிதங்களும் எழுதுகோல்களும் தட்டெழுத்து எந்திரங்களும் இருக்கை மேசைகளில் நிறைந்திருந்திருக்கும். அலமாரிகளில் கோப்புகள் அடுக்கப்பட்டிருந்திருக்கும்.
மின்னஞ்சல்கள் இல்லாமல் இருந்திருக்கும்.
கடிதத்தில் தொலைபேசியில் நேரில் ஒப்புதல் பெற்றிருப்போம் ஒவ்வொன்றிற்கும்.
கருத்தரங்குகளில் , பலர் கூடி ஆலோசிக்கும் சந்திப்புகளில் பலகையில் எழுதப்பட்டு விவரிக்கப்பட்டிருக்கும் பணிகள் எல்லாம். கோப்புகள் வைத்துக் கொண்டு விவரிக்கப்பட்டிருக்கும் வேலைகள் அனைத்தும்.
குறியீடுகளை ஓட விட்டு சரிபார்க்கும் மென்பொருள் துறை என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். கணினியின் மொழிகள் பயன்பாட்டில் இருந்திருக்காது. குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிட வேண்டும் என்ற மன அழுத்தம் மென்பொருள் பணியாளர்களுக்கு இருந்திருக்காது.
உடல்நலம், மனநலம் நன்றாயிருந்திருக்கும்.. ஓரிடத்திலேயே புத்தியை படுத்தியெடுக்கும் வேலைகள் இல்லாமல் இருந்திருக்கும்.
திரையில் மூழ்கி கண்ணாடி போடுவோர் அதிகம் இருந்திருக்க மாட்டார்கள்.
வாகனங்கள் இயந்திரவியல் வல்லுனர்களால் உருவாக்கப்பட்டிருக்கும்ம்.
கணக்காயர்கள் ஏட்டில் பொருளாதாரத்தை வரைந்து கொண்டிருந்திருப்பர்.
தகவல்கள் அனைத்தும் காகிதங்களில் சேகரிக்கப்பட்டிருந்திருக்கும் வன் நகலாய் மட்டுமே.
வங்கிகளில் நேரடியாக மட்டுமே பணபரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கும்.
பயணச் சீட்டுகள் தொலை பேசியில் நேரில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
தொழில்களில் கலைகளில் :
வணிகங்கள் நேரடியாய் நடந்திருக்கும். கடைகளில்
எழுதப்பட்ட விலை ரசீதுகள்
கொடுக்கப்பட்டிருக்கும். புகைப்படங்களில் திருத்தங்கள் செய்ய முடியாது போயிருக்கும்.
ஓவியர்கள் கைகளில் மட்டுமே வரைந்திருப்பர்.
திரைப்படங்களை திருட முடிந்திருக்காது.
திரையரங்குகளில் கூட்டமிருந்திருக்கும்.
திருமண வியாபாரத் தளங்கள் இருந்திருக்காது.
ஜாதக புகைப்படத்துடன் சுற்றும் திருமணத் தரகர்கள் இருந்திருப்பர் நம்நாட்டில்.
வானியல் நிகழ்வுகள் வேறு முறையில் கணிக்கப்பட்டிருக்கும்.
பழக்க வழக்கங்கள்:
புத்தக வாசிப்பு, நாளிதழ் செய்திகள் வாசிப்பு அதிகமிருந்திருக்கும். விளையாட்டுகளில் அதிகம்
ஈடுபாடு இருந்திருக்கும். கவனத்தை ஒருமுகப்படுத்த இயன்றிருக்கும்.
காதல்:
கல்வி நிலையங்களில்,
நூலகங்களில், தட்டெழுத்து பயிலகங்களில், அலுவலகங்களில், பேருந்துகளில் மட்டுமே பல காதல் கதைகள் நடந்தேறியிருக்கும்.
மெய்நிகர் உலகக் காதலன்றி
மெய்யுலக மெய் காதல்கள் காவியமாகி இருக்கும்.
சமூக தளங்கள்:
பல் துலக்குவதிலிருந்து படுக்கையறை வரை காட்சிகள் காணொளி படங்களாய் படம்பிடித்து பகிரப்பட்டு பணம் பெறாது போயிருக்கும்.
அனைத்து பதிவுகளும் எழுதியும் தட்டெழுத்திலும் அச்சிலும் பதிக்கப்பட்டிருக்கும்.
எல்லாம் எண்மமாகி இருக்காது.
அஞ்சல் அலுவலகங்களின் வேலைகள் அதிகமிருந்திருக்கும்.
கடிதம் , தொலைநகல், தொலைபேசி என தகவல்கள் பரிமாறப்பட்டிருக்கும்.
அமைதியாய் அழகாய் இருந்திருக்கும் கணினி இல்லாமல் இருந்திருந்தால்...
பணத்தைத் தேடி ஓடும் இயந்திர வாழ்க்கை சற்று நிதானித்து ஓடியிருக்கும்.
முடிவுரை :
கணினிகள் இல்லாமல் இருந்திருந்தால் அமைதியாய் இருக்கலாம் என்றாலும் கண்களும் கைகளும் கட்டப்பட்டு பணி செய்வதை போலத்தான்.
அனைத்து இயக்கங்களும் தொழில்களும் நின்று விட்டிருக்கும்.
அனைத்தையும் பாதுகாத்து வைக்க இடவசதியும் போதாது போயிருக்கும்
நிமிடத்தில் இணையத்தில் மாற்றப்படும் அனைத்தும் காலதாமதம் அடைந்திருக்கும். நேரம் விரையமாகியிருக்கும்.
சமீபத்தில் நடந்த பெருந்தொற்று காலத்தில் வீட்டில் இருந்தபடியே வேலைகள் செய்திருக்க இயலாது. பொருள்களை வாங்கியிருக்கவும் முடியாது.
இந்த அரட்டை தளத்தில் இப்படி பக்கம் பக்கமாய் நானும் எழுதித் தள்ளி ஒரு வழிசெய்ய முடியாது எல்லாரையும்.
இத்துடன் கட்டுரை நிறைவு பெறுகிறது.